ஓசூர், ஜன.23: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், ராம்நகரில் உள்ள அண்ணா சிலை அருகில் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் நாராயணன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் எம்.பி பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை கலந்து கொண்டு பேசியதாவது:
பர்கூர் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற ஜெயலலிதா, தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார். ஓசூரில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலகிருஷ்ணா ரெட்டி அமைச்சரானார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பலமுறை வெற்றி பெற்றார்கள். ஆனால், யாரும் அமைச்சராகவில்லை. பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் வெற்றி பெற்று, மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராவார்.
அதிமுக ஆட்சி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சாதாரண விவசாயியான முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் இரட்டை குழல் துப்பாக்கி போன்று ஆட்சி செய்து வருகின்றனர். ஓசூர் மாநகராட்சி தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும். எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில், நகர்மன்ற முன்னாள் தலைவர் ராமு, மாவட்ட பொருளாளர் நாராயணன், நிர்வாகிகள் சிட்டி ஜெகதீஷ், பாகலூர் ஊராட்சி தலைவர் ஜெயராம், ஓசூர் ஒன்றிய குழு தலைவர் சசிவெங்கடசாமி, துணை தலைவர் நாராயணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.