புதுச்சேரி, ஜன. 22: புதுவை ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ரூ.18.8 லட்சம் செலவில் நவீன இருதய நோய் பரிசோதனை இயந்திரமும், ரூ.8.8 லட்சம் செலவில் தாய்ப்பால் வங்கியும் தனியார் சங்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. தாய்ப்பால் வங்கியை பிரெஞ்சு துணை தூதர் கேத்தரின் ஸ்வார்டு திறந்து வைத்தார். சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார், மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சுஜாதா, நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் முரளி, ரோட்டரி ஆளுநர்கள் பிறையோன், மணிமாறன், தலைவர்கள் சரவணன், சுரேஷ், எழில், குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு மற்ற தாய்மார்கள் தனது பாலை தானமாக கொடுப்பதற்கு ஊக்குவிக்கும் விதமாகவும், அப்படி தானமாக கொடுக்கும் பாலை பரிசோதனைக்கு உட்படுத்தி பத்திரமான முறையில் பாதுகாக்கவும் இந்த தாய்ப்பால் வங்கி உதவும். மேலும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு மிகவும் வரப்பிரசாதமாக இது அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நவீன இருதய நோய் பரிசோதனை இயந்திரமானது குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு இருதய பிரச்னைகளை கண்டுபிடிக்க உதவும். படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று பரிசோதனை செய்யவல்லது எனவும் கூறினர்.