புதுச்சேரி, ஜன. 22: புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசே தடுத்து நிறுத்தும். விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் தான் முக்கியம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகம், புதுச்சேரியில் செயல்படுத்த வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாகை, காரைக்கால், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நிலப்பகுதியில் 399 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், கடற்பகுதியில் 4047 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும் செயல்படுத்த முடிவு செய்திருக்கின்றனர். புதுச்சேரி பாகூர் பகுதியில் 2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், காரைக்காலில் 39 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.பாகூர், காரைக்காலில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளிலும், நன்றாக விவசாயம் நடைபெறும் பகுதிகளிலும், 4500 மீட்டருக்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு எரிவாயு எடுக்கப்பட இருக்கிறது.நேரடியாக மட்டுமல்லாமல் பக்கவாட்டிலும் குழாய்களை செலுத்தி எரிவாயு எடுக்க முயற்சிக்கின்றனர். இதற்காக ரசாயனம் கலந்த கலவையை அதிக அழுத்தத்தில் ஆழ்குழாய்க்குள் செலுத்துவார்கள். நிலத்தடி நீரின் தன்மை மாறுபடும்.
துரப்பனம் போடப்படும் இடத்தில் மட்டுமல்லாமல், அப்பகுதியின் மற்ற இடங்களில் விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு மண்ணின் தன்மை மாறிவிடும். ரசாயனம் கலந்த நீரின் வெளியேற்றத்தால் சுற்றுப்புறச் சூழல் கடுமையாக பாதிக்கப்படும்.மிகச்சிறிய மாநிலமான புதுச்சேரி பெரும் அபாயத்தில் சிக்கிக் கொள்ளும். கடல் நீர் உட்புகுந்து நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும். இதனையெல்லாம் தெரிவித்து கடந்த ஆண்டு மே மாதம் 20ம் தேதி பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, இந்த திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டோம் என கடிதம் அனுப்பினேன். உள்துறை அமைச்சருக்கும் ஜூன் மாதம் 10ம் தேதி கடிதமும், ஜூலை மாதம் 20ம் தேதி ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் அனுப்பி வைத்தோம். மாநில அரசு அனுமதி கொடுக்காது என்பதை உறுதிபட தெரிவித்தோம்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்தது. அதில், மாநில அரசின் அனுமதி தேவையில்லை. வேதாந்தா நிறுவனம் நேரடியாக பணியை துவங்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் சுற்றுச்சூழல் அனுமதியும் ேதவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாநில அரசின் உரிமையை பறித்து, மக்கள் கருத்துக்கு நேர்மாறாக ஏதேச்சதிகாரத்துடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது.சர்வாதிகார போக்கை தொடர்ந்து தமிழகம், புதுச்சேரியில் செலுத்தி வருகின்றனர். மிகவும் காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் வடநாட்டில் செயல்படுத்தாத இந்த திட்டங்களை இங்கு கொண்டு வந்து செயல்படுத்த நினைக்கிறார்கள். எந்த காலத்திலும் இதனை அனுமதிக்க முடியாது. அப்படி மீறி செயல்படுத்த நினைத்தால், மாநில அரசே முன்னின்று தடுத்து நிறுத்தும். இதற்காக எந்த விளைவுகளையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.எங்களுக்கு விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரம் தான் முக்கியம். மக்களின் உணர்வுகளுக்கு துளியும் மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை.
தமிழகம், புதுவையில் மட்டும் இதனை கொண்டு வருவதற்கு காரணம் என்ன? எனவே வேதாந்தா நிறுவனத்துக்கு கொடுத்த அனுமதியை திரும்ப பெற வேண்டும். ஏற்கனவே இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் பிரச்னை எழுப்பியபோது, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மாநில மக்கள் ஏற்கவில்லையென்றால் இதனை செயல்படுத்த மாட்டோம் என வாக்குறுதி அளித்திருந்தார். அதனை நிறைவேற்ற வேண்டும். வேதாந்தா நிறுவனத்தின் ஏஜெண்டாக மத்திய அரசு செயல்படுகிறது. காரைக்காலில் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலும் புதுச்சேரியில் 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலும் நடைபெறும் விவசாயத்தை சீரழிக்கும் இந்த திட்டத்தை அனுமதிக்க முடியாது.தேவைப்பட்டால் மத்திய அரசுக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கிறோம். இதையெல்லாம் வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.