×

தாயை அவதூறாக பேசியதால் ஆத்திரம் தந்தை சரமாரி அடித்துக்கொலை

சென்னை: சென்னை அடுத்த பொன்னேரி, திருஆயர்பாடியில் தாயை அவதூறாக பேசிய தந்தையை மகன் இரும்பு ராடால் அடித்து கொன்றார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனை கைது செய்தனர். பொன்னேரி அடுத்த திருஆயர்பாடி கல்லுக்கடை மேடு பகுதியை சேர்ந்தவர் ரவி (48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராணி. தம்பதிக்கு அஜித்குமார், சுதாகர் என 2 மகன்கள் உள்ளனர். அஜித்குமார் பொன்னேரியில் காய்கறி கடை வைத்துள்ளார். மது பழக்கத்துக்கு அடிமையான ரவி, தினமும் சம்பாதிக்கும் பணத்தை குடித்து அழித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவரது மனைவி ராணி தனது 2 மகன்களுடன் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசிக்க தொடங்கினார். இதனால் மேலும் ரவி ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மூத்த மகன் அஜித்குமாரின் கடையில் இருந்து ரவியின் மனைவி ராணி வியாபாரத்தை கவனித்துக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த ரவி தனது மனைவி ராணியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. உடனே அங்கு வந்த சுதாகர், ‘‘ஏன் அம்மாவிடம் தகராறு செய்கிறீர்கள். பொது இடத்தில் வைத்து அவதூறாக பேச வேண்டாம். இங்கிருந்து சென்று விடுங்கள்’’ என தந்தை ரவியிடம் கூறியுள்ளார்.
ஆனால், ரவி அங்கிருந்து செல்லாமல் சுதாகரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற சுதாகர், கடையில் இருந்த இரும்பு ராடை எடுத்து சரமாரியாக தந்தையை அடித்ததாக கூறப்படுகிறது.  இதில் ரத்தவெள்ளத்தில் விழுந்த ரவியை அப்பகுதியினர் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை  பலனின்றி நேற்று அதிகாலை ரவி இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தந்தையை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...