குன்னூர், ஜன.22:‘‘விதிமுறை மீறி கட்டப்பட்டு சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என குன்னூர் நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். குன்னூரில் விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை முன்னாள் குன்னூர் நகராட்சி கமிஷனர் சரஸ்வதி ஆய்வு மேற்கொண்டு 54 கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது என்று சீல் வைத்தார்.
இந்நிலையில், குன்னூர் நகராட்சி கமிஷனரை பணியிட மாற்றம் செய்தனர். ஒரு ஆண்டு காலமாக கமிஷனர் நியமிக்கப்படவில்லை. குன்னூர் பகுதியில் சீல் வைக்கப்பட்ட அனைத்து கட்டிடங்களிலும் மறைமுகமாக கட்டுமான பணிகள் நடைபெற்றுவந்தது. குன்னூர் பகுதியில் சீல் வைக்கப்பட்ட பெரும்பாலான கட்டிடங்கள் கட்டுமான பணி நிறைவடைந்து தற்போது அவற்றை பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனர் பாலு கூறுகையில், ‘‘குன்னூர் பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்டு சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களில் கட்டுமான பணிகள் மேற்கொண்ட உரிமையாளர்கள் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.