×

செங்கரை காட்டுச்செல்லியம்மன் கோயில் வளாகத்தில் காட்சி பொருளான கழிவறை

ஊத்துக்கோட்டை, ஜன. 22: ஊத்துக்கோட்டை அருகே செங்கரை காட்டுச்செல்லியம்மன் கோயில் வளாகத்தில், புதர் மண்டி காட்சி பொருளாக  கிடக்கும் கழிவறை மற்றும் குளியலறை  கட்டிடத்தை  பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் செங்கரை கிராமத்தில் புகழ்பெற்ற காட்டுச்செல்லி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களில் பெண் பக்தர்களே அதிக அளவில் காணப்படுவார்கள். அவர்கள்  அங்குள்ள குளத்தில் குளித்து விட்டு ஈரத்துணியுடன்  தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். பின்னர், அவர்கள் உடை மாற்ற மரம் மற்றும் செடிகளின் அருகில் மறைவாக சென்று மாற்றி வந்தனர் இந்நிலையில், பெண்களுக்காக குளிக்கவும், உடை மாற்றவும் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்களும், பக்தர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி, அப்போதைய கும்மிடிப்பூண்டி தொகுதி  எம்எல்ஏ சி.எச்.சேகர் தனது தொகுதி மேம்பாட்டு நிதி 4.75 லட்சம் செலவில் 2011-2012ம் ஆண்டு பெண்களுக்காக கழிவறை மற்றும் குளியலறை கட்டிடம் கட்டிக்கொடுத்தார். இதை கோயிலுக்கு வரும் பக்தர்களும், அப்பகுதி மக்களும் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த கழிவறை மற்றும் குளியறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 2 வருடங்கள் மட்டுமே பயன்பட்டது. பின்னர்,  தண்ணீர் வசதி இல்லாததால் பயன்பாடற்று புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால், கோயிலுக்கு வரும் பெண் பக்தர்கள் குளிப்பதற்கும் உடை மாற்றுவதற்கும் அவதிப்பட்டு வருகிறார்கள்.  மேலும், அங்குள்ள சிமென்ட்டால் கட்டப்பட்ட குடிநீர் தொட்டியும், சின்டெக்ஸ் தொட்டியும் குடிநீர் இல்லாமல் சேதம் அடைந்துள்ளது. எனவே,  குளியலறை மற்றும் குடிநீர் தொட்டிகளை சீரமைத்து தரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள்  கூறியதாவது:

செங்கரை கிராமத்தில் உள்ள காட்டுச்செல்லியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டுக்காக அப்போதைய கும்மிடிபூண்டி எம்எல்ஏ சி.எச்.சேகர், தனது தொகுதி நிதி 4.75 லட்சம் செலவில் குளியலறை மற்றும் கழிவறை கட்டினார். இதில், கடந்த சில வருடங்களாக  தண்ணீர்  வசதி இல்லாததால் அதை பயன்படுத்துவதே இல்லை.  இந்த கழிவறை மற்றும் குளியலறையை சுற்றி புதர்கள் மண்டி காட்சியளிக்கிறது. தற்போது, அருகில் உள்ள சமுதாய கூடத்தை தான் பெண்கள் குளிப்பதற்கும், உடைமாற்றுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். அதிலும்,  திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தால் பக்தர்கள் அவதிப்படுகிறார்கள். மேலும், இந்த பகுதியில் உள்ள சிமென்ட் தொட்டியும், சின்டெக்ஸ் தொட்டியும் கூட தண்ணீர் இல்லாமல் குழாய்கள் உடைந்துள்ளது. எனவே,  சம்பந்தபட்ட துறை அதிகாரிகள், குளியலறை மற்றும் குடிநீர் தொட்டிகளை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Sengarai Wildchelliamman ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...