×

மாமல்லபுரத்துக்கு பாராளுமன்ற பழங்குடியின ஆதிதிராவிடர் நல கமிட்டி உறுப்பினர்கள் வருகை

மாமல்லபுரம், ஜன.22: வட மாநிலத்தை சேர்ந்த பாராளுமன்ற பழங்குடியின, ஆதிதிராவிடர் நலக் கமிட்டி உறுப்பினர்கள் 15 பேர் நேற்று மாமல்லபுரம் வந்தனர். அவர்கள், பல்லவர் கால சிற்பங்களை கண்டு ரசித்தனர். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத், பீகார், உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்பட வட மாநிலங்களை சேர்ந்த பாராளுமன்ற பழங்குடியின, ஆதி திராவிடர் நல கமிட்டி உறுப்பினர்கள் 15 பேர் நேற்று தனித்தனியாக மாமல்லபுரம் வந்தனர். கடற்கரை கோயில் நுழைவாயில் முன்பு பாராளுமன்ற கமிட்டி உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு சார்பில், செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லூயிஸ், ஆர்டிஓ செல்வம், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் ராஜாராமன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர்கள், கடற்கரை கோயில், அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம் உள்பட பல்வேறு புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். அப்போது, அவர்களுக்கு சுற்றுலா வழி காட்டிகள் குமார், லட்சுமணன் உள்ளிட்டோர் பல்லவர் கால சிற்பங்கள் குறித்து தெளிவாக விளக்கினர்.

பின்னர் அவர்கள், சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கடற்கரை கோயில் அருகே நின்று பாராளுமன்ற கமிட்டி உறுப்பினர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முன்னதாக, கடற்கரை கோயில் நுழைவாயில் முன்பு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் தங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாய் கிருஷ்ணன், உமா, பேரூராட்சி  செயல் அலுவலர் லதா, சென்னை சுற்றுலா அலுவலர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். வட மாநில பாராளுமன்ற பழங்குடியின, ஆதிதிராவிடர் நலக் கமிட்டி உறுப்பினர்கள் வருகையை முன்னிட்டு செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் தலைமையில், மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Parliament ,visit ,Mamallapuram ,Tribal Adivasi Welfare Committee ,
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...