வலங்கைமான்,ஜன.22: வலங்கைமான் வட்டார விவசாயிகள் நெல்தரிசில் பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்து பயன்பெற வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மனிதனுடைய உணவில் முக்கிய பங்கு வகிப்பது புரதச்சத்து, இவை பயறுவகை பயிர்களிலிருந்து தான் கிடைக்கிறது. பயறுவகை பயிர்கள் சாகுபடிக்கு மற்ற பயிர்களை விட செலவு குறைவுதான். நெல் தரிசில் சம்பா தாளடி சாகுபடிக்கு பிறகு தை,மாசி மாதங்களில் பயறுவகை பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளலாம். சம்பா தாளடி நெல் அறுவடைக்கு 7-10 நாட்களுக்கு முன் மண் ஈரப்பதமாக மெழுகு பதத்தில் இருக்கும் போது விதைப்பு எடுக்கலாம். கூடுதலாக ஈரம் இருப்பின் மெழுகுப்பதம் வந்தப்பின் விதைக்கலாம் அல்லது அறுவடைக்கு பின் ஈரப்பதம் இருக்கும் போது கயிறு பிடித்து வரிசையாக உளுந்து மற்றும் பயறு விதைகளை ஊன்றலாம், தொடர்ச்சியாக நெல்லை பயிர் செய்யாமல் பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்வது சிறந்த பயிர் சுழற்சி முறையாகும். பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்வதால் வேர்முடிச்சு மூலம் மண்ணில் தழைச்சத்து நிலைநிறுத்தப்படுகிறது, இதனால் மண் வளம் மேம்படும் பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி முறை மாறுபடுகிறது. இதனால் பயிரில் பூச்சிகள் தாக்குதல் குறையும். மேலும் இந்த பயிர்கள் விவசாயிகளுக்கு கணிசமான வருமானத்தை தந்து விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என வலங்கைமான் வட்டார விவசாயிகளை வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.