×

புதுக்கோட்டை மாவட்டத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பனங்கிழங்கு

புதுக்கோட்டை, ஜன.22: புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் பனங்கிழங்கு விளைச்சல் அமோசமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விற்பனை செய்து வருகின்றனர். பனங்கிழங்கு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்பட கூடியது. இது சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. நரம்பு தளர்ச்சி, மலச்சிக்கல் உள்ளிட்ட நோய்களுக்கும் இது அருமருந்தாக உள்ளது. மணலில் உற்பத்தியாகும் பனங்கிழங்கை கடலோர கிராமங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யபடுகிறது.
கோடைகாலம் பனங்கிழங்கு சீசனுக்கு வரும் காலமாகும். அதனால் பனங்கிழங்கு எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து திருமயம் விவசாயி சிவக்குமார் கூறியதாவது: பனங்கிழங்கு பனங்கொட்டையில் இருந்து மணலில் வளர்கிறது. இதற்கு எந்த உற்பத்தி செலவும் கிடையாது. பனை மரத்திலிருந்து பழுத்து கீழே விழும் பனங்பழத்தை சேகரித்து அதை மணல் பகுதிகளில் 3 அடி ஆழத்தில் பதியம் போட்டு வைத்தால் போதும், அது மண்ணின் அடி பாகத்திற்கு சென்று அதிலிருந்து கிழங்கு கிளம்பி மணலில் வளரும். 3 மாதத்தில் இது சாப்பிடுவதற்கு பக்குவமான நிலையில் இருக்கும். பனங்கிழங்கை மணலில் இருந்து எடுத்து அதை நன்றாக வேகவைத்து விற்பனை செய்து வருகிறோம்.

பனங்கிழங்கை குறித்த நேரத்தில் பதியத்தில் இருந்து எடுக்க விட்டால், அதுவே வளர்ந்து பனை மரமாக வளா்ந்து விடும். பனங்கிழங்கு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும். சக்கரை நோயை கட்டுப்படுத்தவும், மலச்சிக்கலை போக்கவும், நரம்பு தளர்ச்சியில் இருந்து விடுபடவும், பனங்கிழங்கு சாப்பிடுவது அரிய மருந்தாகும். பனங்கிழங்கை அவித்து அதன் பின் மேல்தோலையும், கிழங்கில் உள்ள நார்களையும் எடுத்து விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்றாக காயவைத்து, அதன் பின் மிக்ஸியில் போட்டு பவுடராக்கி தினமும் பாலில் போட்டு சாப்பிடுவது மிகவும் உடல் நலத்திற்கு சிறப்பானது.

ஹார்லிக்ஸ் போன்று பனங்கிழங்கு பவுடரை குழந்தைகளும், பெரியவர்களும் அருந்தலாம். தேசிய நெடுஞ்சாலையில் எங்கள் வீடும், தோட்டமும் இருப்பதால் பனங்கிழங்கை அவித்து அதை வீட்டு வாசலில் விற்பனைக்கு வைத்துள்ளோம்.
இந்த பகுதி மணல் சார்ந்த பகுதி என்பதால் அதிகமாக பனங்கிழங்கு பயிர் செய்யப்படுகிறது. என்னை போன்று அறந்தாங்கி, பொன்னமராவதி, திருமயம் உள்ளிட்ட பகுதிகளிலும் பனங்கிழங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வாகனங்களை நிறுத்தி பனங்கிழங்கை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்றார்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...