கரூர், ஜன. 22: கரூர் சுந்தரவிலாஸ் சந்து பகுதியில் அகற்றிய குப்பைகளை குவித்துள்ளதால் சுகாதார கேடு ஏற்படுகிறது., கரூர் திண்டுக்கல் சாலையில் சுந்தரவிலாஸ்சந்து எனப்படும் தெருபயன்பாட்டில் இல்லாமல் நீண்டகாலமாக கிடந்தது. இந்த சந்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தெரு போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. எனினும் இதனை முழுமையாக பயன்படுத்தவில்லை. நகராட்சி நிர்வாகம், காவல்துறை ஒத்துழைப்பு இல்லாமல் போனதால் சந்தை பல லட்சம் ரூபாய் செலவு செய்து சீரமைத்தும் போக்குவரத்து இன்றி காணப்படுகிறது. முக்கிய நாட்களிலும், திருவிழா காலங்களிலும் ஜவகர்கடைவீதி- திண்டுக்கல் சாலை இடையே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இருந்தும் இந்த சமயத்தில் கூட இந்த தெருவை பயன்படுத்துவதில்லை.
இந்நிலையில் சுந்தரவிலாஸ்சந்து பகுதியில் குப்பைகள் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக அகற்றப்படாமல் கிடந்தது. இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் மனு அளித்த பின்னர் நகராட்சி பணியாளர்கள் வந்து குப்பைகளை அகற்றினர். எனினும் அகற்றிய குப்பைகளை அப்படியே விட்டு விட்டு போய் விட்டனர். சந்தின் முன்பு குப்பைகள் குவிந்துகிடக்கிறது. இதனால் சுகாதாரகேடு ஏற்படுகிறது.கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதாக இப்பகுதியினர் தெரிவித்தனர். மேலும் இரவு நேரங்களில் குடிமகன்களின் கூடாரமாக இருக்கிறது. சந்து பகுதியில் குடித்து விட்டு பாட்டில்களை வீசி விட்டு போய் விடுகின்றனர். இப்பகுதியில் குடியிருப்பவர்களே இந்த சந்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. குப்பைகளை அகற்றி சந்தை போக்குவரத்திற்கு மீண்டும் பயன்படுத்த அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.