×

ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக மிரட்டல் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல், ஜன. 21: ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக மிரட்டுவதாகக் கூறி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் அருகே யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜா. கூலித்தொழிலாளியான இவரது மனைவி அந்தோணி ஜெனிமேரி. இப்பகுதியில் கிறிஸ்துராஜா தனது உறவினர்கள் 6 குடும்பத்தினருடன் சொந்த செலவில் புனித சந்தியாகப்பர் கோயில் கட்டி உள்ளார். ஊர் நாட்டாமை, மணியகாரர் உள்ளிட்ட சிலர் முன்விரோதம் காரணமாக கோயில் சம்பந்தமாக இவர்களிடம் வரி வாங்குவதில்லை என்று தெரிகிறது.

மேலும், கிறிஸ்துராஜாவின் குடும்பத்தை மட்டும் ஊரை விட்டு ஒதுக்கி விடுவோம் என்று மிரட்டுவதாகக் கூறி கிறிஸ்துராஜா, அவரது மனைவி அந்தோணி ஜெனிமேரி ஆகியோர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்தனர். தாங்கள் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டனர். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் இருவரது உடலிலும் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இச்சம்பவம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : city ,collector ,office ,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு