×

தனி பட்டா கேட்டு கிராம மக்கள் மனு


கிருஷ்ணகிரி, ஜன.21: தனிபட்டா கேட்டு பையனூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பர்கூர் தாலுகா சிகரலப்பள்ளி அடுத்த பையனூர் கிராம மக்கள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சிகரலப்பள்ளி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பையனூர் கிராமத்தில் உள்ள 28 குடும்பத்தினருக்கு கடந்த 1989ம் ஆண்டு ஒரு ஏக்கர் 40 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்திற்கு ஒரே பட்டா மட்டுமே வழங்கப்பட்டது. இவற்றை 28 குடும்பத்திற்கும் தனித்தனி பட்டாவாக வழங்க வேண்டும் என்று அளித்த மனுவை தொடர்ந்து, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சர்வேயர் நிலத்தை அளக்க வந்தார். அப்போது, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த ஒரு சிலர் சர்வேயரை மிரட்டி அனுப்பிவிட்டனர். அதனால், இன்று வரை எங்களுக்கு தனிப்பட்டா கிடைக்கவில்லை. எனவே, இந்த நிலத்தை அளந்து அனைவருக்கும் தனிப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்