பாலக்கோடு, ஜன.21: பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மத்திய குழு நேரில் ஆய்வு செய்தது. அப்போது, மருத்துவமனையின் சிறந்த பராமரிப்பிற்காக 100க்கு 85 மதிப்பெண் வழங்கி பாராட்டு தெரிவித்தது. பாலக்கோடு அரசு மருத்துவமனையில், மத்திய அரசின் ஸ்வச் பாரத் காயகல்ப ஆய்வுக்குழுவினர், மருத்துவர் அருண் நடேஷ் தலைமையில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, நோயாளிகளுக்கு போதுமான சுகாதார கழிப்பிட வசதிகள் உள்ளதா என பார்வையிட்டனர். மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முறையாக வழங்கப்படுகிறதா, உள்நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா, மருந்து, மாத்திரைகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். மேலும், மருத்துவமனையை சுற்றிலும் பசுமை பூங்காக்கள் மற்றும் மூலிகை தோட்டங்கள் அமைத்துள்ளதற்கு பாராட்டு தெரிவித்து 100க்கு 85 மதிப்பெண்களை வழங்கினர். இந்த ஆய்வின்போது, தர்மபுரி நலப்பணிகள் இனை இயக்குநர் மருத்துவர் செல்வி, மாவட்ட சுகாதார ஒருங்கினைப்பாளர் ராஜ்குமார், மருத்துவ அலுவலர் பாலசுப்ரமணியம், மருத்துவர் மணிமேகலை, செவிலியர் அனிதா, மருந்தாளுநர் முத்துசாமி மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடனிருந்தனர்.