×

வலங்கைமான் அருகே சாலையோர மரத்தில் கார் மோதல் பைனான்சியர் உள்பட 4 பேர் படுகாயம்

வலங்கைமான், ஜன.21: வலங்கைமான் அடுத்த ஆண்டாங்கோயில் பகுதியில் சாலையோர மரத்தில் கார் மோதியதில் காரில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பைனான்சியர் உள்ளிட்ட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவாரூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் முத்தையா மகன் கதிரேசன்(47). பைனான்ஸ் தொழில் செய்துவருகிறார். கதிரேசன் மகன்கள் படிப்பிற்காக வலங்கைமான் வளையல்காரத்தெரு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தற்போது வசித்து வருகின்றார். பொங்கல் பண்டிகைக்காக தனது சொந்த ஊரான திருவாரூர் சென்று விட்டு பள்ளி விடுமுறை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடவாசல் வழியாக குடவாசல்-பாபநாசம் சாலையில் குடும்பத்துடன் காரில் வந்துள்ளார். காரை கதிரேசன் ஓட்டி வந்த நிலையில் வலங்கைமான் அடுத்த மேலவிடையல் ஊராட்சி ஆண்டாங்கோயில் மாஞ்சேரி பஸ் நிறுத்தம் பகுதியில் கார் வந்த போது எதிர்பாராத விதமாக எதிர்திசையில் உள்ள சாலையோர மரத்தில் மோதியது. இதில் கதிரேசன்(47) மற்றும் அவரது மனைவி விசாலாட்சி(47), மற்றும் அவரது மகன்கள் ராம்(17) விஜயலட்சுமணன்(16) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வலங்கைமான் எஸ்.ஐ செந்தில் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் குடந்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : car collision financier ,Valangaiman ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு