×

மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி

ஆவடி, ஜன.21: ஆவடி, சத்தியமூர்த்தி நகரில் மர்ம காய்ச்சலுக்கு வடமாநில சிறுவன் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி, சத்தியமூர்த்தி நகர், காவலர் குடியிருப்பில் பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய அடுக்குமாடி வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் இவர்கள் இவ்வளாகத்தில்  உள்ள இரும்பு கொட்டகையில் தங்கி உள்ளனர். இப்பணியில் ஒடிசா மாநிலத்தைச்சேர்ந்த லசிரானா சாஸ்தா, தனது மனைவி சுஷ்மா, மகன் மிர்தாஸ் (10) ஆகியோருடன் தங்கியிருந்து பணி செய்து வருகிறார்.  மிர்தாஸ், பூந்தமல்லியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தான். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த மிர்தாசை. பெற்றோர் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு அவனுக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. அவனை பெற்றோர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி நள்ளிரவு மிர்தாஸ் பரிதாபமாக  இறந்தான்.
புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். வடமாநில சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு இறந்தது அப்பகுதி தொழிலாளர்கள் இடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...