பொன்னேரி, ஜன.21: மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி மற்றும் வல்லூர் ஊராட்சி இடையே ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணி துவக்க விழா நேற்று நடைபெற்றது. மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி மற்றும் வல்லூர் ஊராட்சிகளுக்கிடையே இமானுவேல் தனியார் பள்ளியில் இருந்து பட்டமந்திரி மெயின் ரோடு வரை இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை கடந்த 5 ஆண்டுகளாக பழுதடைந்துள்ளது. சாலையை சரிசெய்ய கோரி திமுகவை சேர்ந்த அத்திப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் தலைமையில் காட்டுப்பள்ளி காமராஜ் துறைமுக நிறுவனத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தது. அதன் பேரில் சமூக நல திட்டத்திற்கு ரூ. 22 லட்சம் நிதி கடந்த ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி இமானுவேல் தனியார் பள்ளி அருகே இப்பணிக்கான பூமி பூஜை துவக்க விழா நேற்று நடந்தது. மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மீஞ்சூர் ஒன்றிய தலைவர் அத்திப்பட்டு ரவி, மாவட்ட கவுன்சிலர் உதயசூரியன், அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேலு, துணைத் தலைவர் எம்.டி.ஜி கதிர்வேல், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா அன்பழகன், வல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர் எஸ். ரவி., துணைத்தலைவர் இலக்கியா ராயல், வார்டு உறுப்பினர்கள் அத்திப்பட்டு கோமதிநாயகம், வல்லூர் பொம்மி ராஜசேகர், சாலைப்பணி ஒப்பந்தக்காரர் கமல் மற்றும் அத்திப்பட்டு ஊராட்சி செயலர் பொற்கொடி, அத்திப்பட்டு வல்லூர் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பொதுமக்கள், ஒன்றிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.