திருத்தணி, ஜன.21: திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் அறிவியல் கல்லூரி மற்றும் தளபதி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி இணைந்து வளாகத்தில் உலக சாதனை படைக்கும் வகையில் 2020 மாணவர்கள் பங்கேற்று, 2020 அஞ்சல் அட்டைகள் எழுதும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் குழந்தைகள் உரிமைகளை காப்போம், பெண் குழந்தை திருமணத்தை தடுப்போம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்ற வாசகங்கள் எழுதும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை பள்ளி தாளாளர் எஸ்.பாலாஜி துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் விநாயகம் வரவேற்றார். இதில், 2020 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அஞ்சல் அட்டையில் எழுதினர். பின், அந்த அஞ்சல் அட்டைகளை குடியரசு தலைவருக்கு அனுப்பி, உலக சாதனை படைக்கும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டது. தொடர்ந்து இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியை, குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் தொண்டு நிறுவனம் மற்றும் தளபதி மெட்ரிக் மேனிலைப் பள்ளி, கல்லூரி ஆகியவைகள் இணைந்து நடத்தின. நிகழ்ச்சியில், தளபதி மகளிர் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியம், திட்ட மேலாளர் வெங்கடேசன் உள்பட பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில், இடைநிலை ஆசிரியர் கோகுல்ராஜ் நன்றி கூறினார்.