கோவை, ஜன. 21: அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நாட்டமறி தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்காக, கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் ஹைடெக் கம்ப்யூட்டர் லேப் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2019-20ம் கல்வியாண்டில் அரசு, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 9ம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு தேர்வு நடத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் வழியில் தேர்வு நடக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் 25ம் தேதி வரை தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கோவை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஹைடெக் கம்ப்யூட்டர் லேப் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு மேல்நிலைப்பள்ளிக்கு 21 கம்ப்யூட்டர்கள், உயர்நிலைப்பள்ளிகளுக்கு 11 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. அதிவேக இணையதள வசதி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறனை கண்டறியும் வகையில் தமிழ் மொழியறிவு, ஆங்கில மொழியறிவு, கணிதம், அறிவியல், இடம் சார்ந்த பண்புகள், தர்க்கசிந்தனை உள்ளிட்ட ஆறு தலைப்புகளில் 90 மதிப்பெண்களுக்கு தமிழ், ஆங்கில மொழியில் தேர்வு நடக்கிறது. ஆன்லைன் முறையில் மொத்தம் 1.30 மணி நேரம் தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நுழைவு ஐடி-யை பயன்படுத்தி தேர்வு எழுத வேண்டும். கோவை ராஜவீதி துணிவணிகர் சங்கம் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளில் நட்டாமறி தேர்வு தொடர்பான ஆன்லைன் பயிற்சிகள் மாணவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.
தேர்வுக்கு பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் பரிசோதிக்கப்பட்டு, நல்ல நிலையில் உள்ளதா? என உறுதிசெய்யும் பணிகள் நடந்து வருகிறது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “நாட்டமறி தேர்வுக்காக ஹைடெக் லேப் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் தேர்வை எப்படி எதிர்கொள்வது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. காலை, மதியம் என 2 பிரிவுகளாக தேர்வு நடத்தப்படுகிறது” என்றனர்.