×

அருப்புக்கோட்டையில் பயன்பாட்டுக்கு வராமலே பாழான பூங்காக்கள்: வீணான நகராட்சி நிதி

அருப்புக்கோட்டை, ஜன. 20: அருப்புக்கோட்டையில் ரூ.பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் பயன்பாட்டுக்கு வராமல் புதர்மண்டிக் கிடக்கின்றன. இதனால், நகராட்சி நிதி வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.அருப்புக்கோட்டையில் அஜீஸ் நகர், வசந்தம் நகர், ரயில்வே பீடர் ரோடு, எம்டிஆர் நகர், கணேஷ் நகர் ஆகிய பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மூலம் தலா ரூ.20 லட்சத்தில் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இதில் அஜீஸ்நகர் பூங்கா மட்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. மற்ற பூங்காக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.

சொக்கலிங்கபுரம் எம்டிஆர் நகர் மற்றும் கணேஷ் நகரில் அமைக்கப்பட்ட பூங்காக்களில் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் அமைக்கப்படவில்லை. அழகிய வண்ணச் செடிகள், செயற்கை புல்தரைகள் அமைக்கப்பட்டு தண்ணீரின்றி கருகி விட்டன. அஜீஸ்நகர் பூங்காவிலும் பூச்செடிகள் கருகி வருகின்றன. நகரில் அமைக்கப்பட்ட அனைத்து பூங்காக்களும் போதிய பராமரிப்பின்றி, ரூ.பல லட்சம் வீணாகியுள்ளது.ஓராண்டுக்கு முன்பு ரயில்வே பீடர் ரோடு, கணேஷ் நகர், எம்டிஆர் நகர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் பயன்பாடு இல்லாமல் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் நகரில் உள்ள பூங்காக்களை பராமரிக்க, பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘அருப்புக்கோட்டையில் பொழுது போக்க இடமில்லை. நகரில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களை பராமரித்தால் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : parks ,Aruppukkottai ,
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...