ஈரோடு, ஜன. 20: சேலம் மாவட்டம் எடப்பாடி செவடனூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (38). இவரது நண்பர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த அண்ணாதுரை என்ற துரைசாமி (36). இவர்கள் இருவரும் வீரப்பன் சத்திரத்தில் உள்ள தறிபட்டறையில் வேலை பார்த்து வருகின்றனர். ராமச்சந்திரன் சபரிமலை சென்றிருந்தபோது, அவரது புதிய பெட்சீட்டினை துரைசாமி எடுத்து வைத்துக்கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஈரோடு சத்தி ரோட்டில் சி.என்.கல்லூரி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, துரைசாமி, ராமச்சந்திரனிடம் எடுத்து வைத்திருந்த பெட்சீட்டினை அவரிடமே விற்க விலை பேசி உள்ளார். இதில் ராமச்சந்திரன் எனது பெட்சீட்டை எனக்கே விற்கிறாயா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த துரைசாமி, ராமச்சந்திரனை தகாத வார்த்தையால் பேசி, அவரது பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து ராமச்சந்திரனின் கழுத்தில் குத்தினார்.
ராமச்சந்திரனின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்து துரைசாமி அங்கிருந்து தப்பி சென்றார். ராமச்சந்திரனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, துரைசாமியை தேடி வருகின்றனர்.