வேட்டவலம், ஜன.20: வேட்டவலம் அடுத்த கோணலூர் கிராமம் துரிஞ்சலாற்றில் நேற்று அம்மன் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வேட்டவலம் அடுத்த கோணலூர் கிராமத்தில் நேற்று ஆற்றுத்திருவிழா நடந்தது. இதையொட்டி, கோணலூர் மகா மாரியம்மன், காட்டு மலையனூர் மாரியம்மன் கோயில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலைகள் துரிஞ்சலாற்றுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
அப்போது, மேளதாளம், தாரை தப்பட்டை முழங்க அம்மன் சிலைகளை பக்தர்கள் சுமந்து கொண்டு துரிஞ்சலாற்றை அடைந்தனர். அங்கு அம்மன் தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆற்றுத்திருவிழாவையொட்டி டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, குமார், வேட்டவலம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோவிந்தசாமி தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.