உடன்குடி.ஜன.20: உடன்குடி செட்டியாபத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமையை தடுக்க வேண்டும், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணியிட பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடன்குடியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலர் உலகமணி தலைமை வகித்தார். ஒன்றியத்தலைவி செல்வி, நிர்வாகிகள் இசக்கியம்மாள், அன்னக்கிளி, அனிதா, பாலசுந்தரி, பேச்சியம்மாள், சலோமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்க மாவட்ட செயலர் பூமயில், மார்க்சிஸ்ட் ஒன்றியசெயலர் ஆறுமுகம், சிஐடியூ ஒன்றிய தலைவர் கிறிஸ்டோபர், விவசாய சங்க செயலர் மகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.