×

மாவட்டத்தில் 1276 மையங்களில் 1.60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

நாமக்கல், ஜன.20:  நாமக்கல் மாவட்டம் முழுவதும் 1276 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதன்மூலம் 1.60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், 1276 முகாம்களில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கலெக்டர் மெகராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ராசிபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சுந்தரம் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். முன்னாள் நகர்மன்ற தலைவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாமக்கல் கோட்டை ரோட்டில் உள்ள தாய் சேய் நல விடுதியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை எம்எல்ஏ பாஸ்கர் தொடங்கி வைத்தார்.  நகராட்சி கமிஷனர் ஜகாங்கீர் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராசிபாளையம் ஊராட்சியில் ஊராட்சி பஞ்சாயத்து தலைவர் சுப்ரமணியன் போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்தார்.

நாமக்கல் நகராட்சி பகுதியில் 25 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 1.60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. சொட்டு மருந்து வழங்கும் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் குழந்தைகளின் வசதிக்கான 40 நடமாடும் மையங்களும் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று முதல் 3 நாட்கள் சுகாதார பணியாளர்கள் வீடு,  வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து போட உள்ளனர்.

Tags : children ,centers ,
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்