×

வெண்ணந்தூர் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

நாமக்கல், ஜன.20:  வெண்ணந்தூர் ஒன்றியத்தில் கிராமம், கிராமமாக சென்று வாக்காளர்களுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் நன்றி தெரிவித்தார். நாமக்கல் முன்னாள் எம்பி சுந்தரம், நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, வெண்ணந்தூர் ஒன்றியத்திலுள்ள 6வது வார்டுக்குட்பட்ட பொன்பரப்பிப்பட்டி, எண்.3 குமாரபாளையம், அனந்த கவுண்டம்பாளையம், மின்னக்கல், அலவாய்ப்பட்டி, கல்லாங்குளம் கட்டனாச்சம்பட்டி, தொட்டியவலசு உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன். மாவட்ட ஊராட்சிக்குழு மூலம், கூடுதல் நிதி பெற்று இந்த பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மக்கள் பிரச்னையை தீர்த்து வைப்பேன்,’ என்றார். இந்த நிகழ்ச்சியின்போது, வெண்ணந்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தாமோதரன், ஒன்றிய குழுத்தலைவர் தங்கம்மாள் பிரகாசம், துணைத்தலைவர் பெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பழனிவேலு பாலச்சந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

Tags : voters ,
× RELATED பெரும்புதூர் நாடாளுன்ற தொகுதியில்...