×

கோவிலூர் ஏரியில் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்

தர்மபுரி, ஜன.20: தர்மபுரி அருகே கோவிலூர் ஏரியில் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அமைந்துள்ளது கோவிலூர் ஏரி. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரி ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரிக்கு வத்தல் மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் நீராதாரமாக உள்ளது. இந்த ஏரியை சுற்றியுள்ள கோவிலூர், அதியமான்கோட்டை, நார்த்தம்பட்டி, பூதான அள்ளி உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 100க்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஏரிக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. இதனால், விவசாய நிலங்கள் பாசன வசதி இன்றி வறண்டு காணப்படுகிறது. அதேவேளையில், ஏரியை சீரமைக்காததால் புதர்மண்டி கிடக்கிறது. இந்நிலையில், கோவிலூர் ஏரியில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், ஏரி மாசடைந்து வருகிறது. எனவே, இப்பகுதியில் மீண்டும் விவசாயம் செழிக்கும் வகையில் ஏரியில் உள்ள முட்புதர்களை அகற்றி தூர்வார வேண்டும். ஏரிக்கரையில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : lake ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு