மன்னார்குடி, ஜன. 20: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மதுக்கூர் சாலை மணிகண்டன் நகரை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (44). இவர் மன்னார்குடி பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் தனக்கு சொந்தமான ஆட்டோவை நிறுத்தி வைத்து சவாரி சென்று வருமானம் ஈட்டி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை பிரேம் ஆனந்த் தனது ஆட்டோவில் மன்னார்குடியில் இருந்து முத்துப்பேட்டைக்கு சவாரி சென்று விட்டு திரும்பி வரும் வழியில் பெருகவாழ்ந்தான் அருகே இடைச்சிமூளை கிராமத்தில் சாலை வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக ஆட்டோ நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அப்போது அவ்வழியே வந்த சிலர் பிரேம் ஆனந்தை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.