ஒட்டன்சத்திரம், ஜன. 20: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மார்க்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நகரங்களில் கிடைக்கும் கல்வி வசதிகளை அரசுப்பள்ளியில் பெறுவதற்காக முத்தமிழ் கல்வி அறக்கட்டளை துவக்க விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. கல்வியைப் பற்றிய விழிப்புணர்வு தற்போதுள்ள மாணவர்களிடம் இல்லை. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு அதற்கு மேல் என்ன செய்வது, படித்தவர்களுக்கு எல்லாம் வேலை கிடைத்துவிட்டதா என்ற நோக்கில் பலரும் கல்வியை கைவிடுகின்றனர்.
கல்வி சம்பாத்தியம் செய்ய மட்டுமல்ல வாழ்க்கையை நெறிப்படுத்தும் உணர்வை மாணவர்களுக்கு ஊட்டுவதுடன், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவும், பொது அறிவு சம்மந்தப்பட்ட தகவல்களை எளிமையான முறையில் மாணவர்களை கற்கவைப்பது போன்ற செயல்பாடுகளுக்காக இக்கல்வி அறக்கட்டளை உருவாக்கப்பட்டது என முன்னாள் மாணவர்கள் கூறினர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் செய்திருந்தார். பள்ளி முன்னாள் மாணவர் முகமதுஆரீப் நன்றி கூறினார்.