×

ஜிஎச் பிளம்பர் தற்கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மருத்துவமனை முன்பு மறியல்

பொள்ளாச்சி, ஜன.19: பொள்ளாச்சி அடுத்த குரும்பபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (32). பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிளம்பராக பணியாற்றி வந்தார். இவருக்கு பத்மாவதி (24) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் அவரது வீட்டருகே அப்பகுதியை சேர்ந்தவர்கள்  பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளனர். மேள தாளத்துடன், ஆடல் பாடல் என விமர்சையாக விழா நடந்துள்ளது. அப்போது அவ்வழியாக சென்ற ஆனந்தகுமாரின் மீது கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவர் மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்தகுமாருக்கும் வாலிபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் 10க்கும் மேற்பட்டோர் ஆனந்தகுமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். பொதுவெளியில் தாக்கப்பட்டதால் மனமுடைந்த ஆனந்தகுமார் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 இந்நிலையில், ஆனந்தகுமாரின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி பொள்ளாச்சி அரசு மருத்துவமனை முன் ஆனந்தகுமாரின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி டிஎஸ்பி சிவக்குமார் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் மருத்துவமனை சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்படைந்தது. மேலும் ஆனந்தகுமாரை தாக்கியதாக பொள்ளாச்சி குரும்பபாளையத்தை சேர்ந்த மதன், கார்த்தி, அருண், மனோகர் ஆகியோரை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் பிடித்து விசாரனை நடத்தி வருகின்றனர்

Tags : GH plumber ,hospital ,arrest ,
× RELATED டெல்லியில் உள்ள அப்போலோ...