×

கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாகை, ஜன.19: நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு நாகை நகராட்சி சார்பில் நாகூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. நாகூரில் உலக பிரசித்திப்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. இங்கு வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு விழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு கொடி ஊர்வலம் நாகை புதுப்பள்ளி தெரு வழியாக யாஹீசைன் தெரு, நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, பெரிய கடை தெரு, நீலா தெற்கு வீதி, கீழவீதி, வடக்கு வீதி, தேரடி தெரு, புது தெரு, சர்அகமது தெரு, கொட்டுப்பாளைய தெரு உள்ளிட்ட நாகையில் 40 தெருக்களின் வழியாக சென்று பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூர் எல்லையை சென்றடையும். இதை தொடர்ந்து நாகூரில் செய்யது பள்ளி தெரு, குஞ்சாலி மரைக்காயர் தெரு, ரயிலடி தெரு உள்ளிட்ட 14 தெருக்களின் வழியாக சென்று தர்காவின் அலங்கார வாசலை சென்றடையும். விழாவையொட்டி நாகூர் தர்காவிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் கந்தூரி விழாவையொட்டி நாகை நகராட்சி சார்பில் நாகூர் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நேற்று நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ் தலைமையில் நடந்தது.

இதில் அலங்கார வாசல், பெரிய கடைத்தெரு, அரசு மருத்துவமனை சாலை, சிவன் சன்னதி தெரு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் கடைகளின் மேற்கூரைகள், சிலாப்புகள் உள்ளிட்டவைகள் பொக்லின் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. ஒரு சிலர் தாங்களாவே முன்வந்து தங்களது கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைக்கக் கூடாது எனவும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க டிஎஸ்பி முருகவேல் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : occasion ,festival ,Nagore ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...