×

எம்.கரிசல்குளம் சேதமடைந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட 10 கிராம மக்கள் கோரிக்கை

சாயல்குடி, ஜன. 19: கடலாடியிலிருந்து எம்.கரிசல்குளம் செல்லும் சாலையில் சேதமடைந்துள்ள மலட்டாறு பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட வேண்டும் என 10 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலாடி ஒன்றியம் எம்.கரிசல்குளம், ஒச்சதேவன்கோட்டை, காணீக்கூர், பிள்ளையார்குளம், உசிலங்குளம், வாகைக்குளம், திட்டங்குளம் மற்றும் கூரான்கோட்டை, வெள்ளம்பல், வேடகரிசல்குளம், மணிவலசை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மாணவர்கள் உயர்நிலை கல்வி, கல்லூரி படிப்பிற்கு கடலாடி வந்து செல்கின்றனர்.பொதுமக்கள் அத்திவாசிய பொருட்கள் வாங்குவதற்கும், மருத்துவமணை, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டிற்கும் கடலாடி வந்து செல்லும் நிலை உள்ளது.
இப்பகுதிகளில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், கிராம செவிலியர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் வெளியூர்களிலிருந்து வருகின்றனர்.

மேலும் பிரசித்திபெற்ற கூரான்கோட்டை தர்மமுனீஸ்வரர், காணீக்கூர் பாதாளகாளியம்மன், எம்.கரிசல்குளம் வில்வநாதன் ஆகிய கோயில்களுக்கு வெள்ளி, செவ்வாய் கிழமைகள் மற்றும் விசேஷ காலங்களில் அதிகளவில் வெளியூர்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடலாடியிலிருந்து எம்.கரிசல்குளம் செல்லும் வழியில் உள்ள மலட்டாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தரைப்பாலம் விரிசல் விட்டு சேதமடைந்து கிடக்கிறது. இதில் லோடு வாகனங்கள் சென்றால் பாலம் இடிந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த பழைய பாலத்தை அகற்றி விட்டு புதியபாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இப்பகுதி கிராமமக்கள் கூறும்போது, ‘இப்பகுதிக்கு சாயல்குடியிலிருந்து இயக்கப்படும் ஒரே ஒரு அரசு நகர பேருந்து காலை 11 மணிக்கும் இரவு 7 மணிக்கு மேலும் வந்து செல்கிறது. இதனால் இப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள், மாணவர்கள்  சாயல்குடி, கடலாடிக்கு பள்ளி, அலுவலக நேரத்திற்கு வந்து செல்லமுடியாமல், ஷேர் ஆட்டோகளில் கூடுதல் கட்டணம் கொடுத்து, அதிகபாரத்துடன் ஆபத்து பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. இப்பகுதி பள்ளிகளுக்கு வரும்  ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், கோயில்களுக்கு வரும் பக்தர்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2015ம் ஆண்டு முதல் முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கழகம் கிளை சார்பில் கடலாடியிலிருந்து எம்.கரிசல்குளத்திற்கு ஒரு நகர பேருந்து இயக்கப்பட்டது. ஆனால் கடலாடியிலுள்ள கடைகளின் ஆக்கிரமிப்பு, சாலை, பாலம் சரியில்லை எனக்கூறி அப்பேருந்தை நிறுத்திவிட்டனர். இதனால் கடலாடிக்கு கிராம மக்கள் ஷேர் ஆட்டோக்களில் சென்று வருவதால், சாயல்குடி வழித்தட அரசு பேருந்து காலியாக வந்து செல்கிறது. எனவே புதிய பாலம் கட்டி, மாணவர்கள், கிராமமக்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, அலுவலக நேரத்திற்கு கடலாடி மற்றும் சாயல்குடிக்கு கூடுதலாக அரசு பேருந்தை இயக்க வேண்டும், பக்கத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று வரவேண்டும் என கூறினர்.

Tags : Residents ,removal ,bridge ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!