×

இடப்பிரச்னையில் கடைகளை இடித்த வக்கீல் உள்பட 5 பேர் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே பாடியில் இடப்பிரச்சனை தொடர்பாக 3 கடைகளை பொக்கலைன் இயந்திரம் மூலம் இடித்த வக்கீல்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பழனிவேல் (70). இவருக்கு பாடி, ரங்கநாதன் நகரில் 600சதுர அடி இடத்தில் மெக்கானிக், டிபன், பஞ்சர் உள்ளிட்ட 6 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். இவரது கடைகளுக்கு பின்புறம்,  ஆவடி, குமரன் நகரை சேர்ந்த ராஜி என்பவருக்கு சொந்தமான 5 கிரவுண்டு இடம்  உள்ளது.

மேற்கண்ட இடம் தொடர்பாக இருவருக்குமிடையே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் பழனிவேலுக்கு சொந்தமான ஆறு கடைகளில் 3 கடைகளை மர்ம நபர்கள் பொக்கலைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதுபற்றி அறிந்த வாடகைக்கு இருக்கும் மெக்கானிக் கடையின் உரிமையாளர் சுந்தர் (52) நேரில் வந்து, தட்டி கேட்டுள்ளார். அப்போது மர்ம கும்பல் அவரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில், கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பழனிவேல் கடைகளை இடித்தவர்கள் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் சார்ந்த முருகன் (30), ஜெய்சங்கர் (29), சென்னை ஜாபர்கான்பேட்டை சேர்ந்த வெங்கடேசன் (30), ஈக்காட்டுத்தாங்கல், அம்பாள் நகரை வழக்கறிஞர்கள் நெப்போலியன் (30), சக்திவேல் (30) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த 5 பேரையும் கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக ராஜி உள்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : shops ,area ,lawyer ,
× RELATED அறந்தாங்கியில் நகை, பாத்திர கடைகளில் பயங்கர தீ