×

கடனுக்கு பப்ஸ் தராததால் கடையை சூறையாடிய 2 வாலிபர்கள் கைது

ஆவடி:  பட்டாபிராம், தண்டுரை, தெற்கு பஜாரில் பேக்கரி கடை உள்ளது. இதன் உரிமையாளராக முருகன் உள்ளார். இந்த கடையில் தண்டுரை, ஏகாத்தம்மன் கோயில் தெருவைச் சார்ந்த திருப்பதி (30) என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், கடந்த 15ந்தேதி இரவு திருப்பதி கடையில் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு 2வாலிபர்கள் வந்து கடனுக்கு பப்ஸ் கேட்டுள்ளனர். இதனை அடுத்து, அவர் கடையில் உரிமையாளர் இல்லை. அவர் வந்தவுடன் கடன் கேட்டு பப்ஸ் வாங்கி கொள்ளுங்கள் எனக் கூறி உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இரு வாலிபர்கள் சேர்ந்து திருப்பதியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், அவர்கள் இருவரும் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து கடையின் கண்ணாடி ஷோக்கேசை அடித்து உடைத்துள்ளனர். பின்னர், அவர்கள் திருப்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

புகாரின் அடிப்படையில் பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கடை உடைத்தவர்கள் தண்டுரை, சி.பி.எம் சர்ச் தெருவை சேர்ந்த நவராஜ் (20), அதே பகுதி நாகம்மன்  கோவில் தெருவைச் சேர்ந்த உதயகுமார் (20) ஆகியோர்  என தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் தலைமறைவாக இருந்த இருவரையும் நேற்று மாலை கைது செய்தனர்.

Tags : looting shop ,
× RELATED கடனுக்கு பப்ஸ் தராததால் கடையை சூறையாடிய 2 வாலிபர்கள் கைது