×

நீர்மேலாண்மை திட்ட செயல்பாடுகளுக்காகதிருவண்ணாமலை மாவட்டத்துக்கு தேசிய விருது

திருவண்ணாமலை, ஜன.14: நீர்மேலாண்மை திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியதற்காக, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் சேமிப்பு, மழைநீர் சேமிப்பு, நீர்நிலை ஆதாரங்களை மேம்படுத்துதல், மழைநீர் சேமிப்பின் அவசியத்தை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றில், திருவண்ணாமலை மாவட்டம் முன்னோடியாக செயல்பட்டுள்ளதற்காக, ‘ஸ்ேகாச் விருது - நீர்’ எனும் தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அங்கீகாரத்துடன் செயல்படும் ஸ்கோச் எனும் அமைப்பு இந்த விருதை வழங்கியிருக்கிறது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், இந்த விருதினை திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா பெற்றார்.

அதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்ததாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த ஆண்டு ஜல் சக்தி அபியான் சார்பில், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்தியதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 11.2 மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 3.4 மீட்டராக உயர்ந்திருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையைவிட, அதிகபட்சமாக 1,400 செமீ மழை பதிவானது. ஆனாலும், நிலத்தடி நீர்மட்டம் 14 மீட்டருக்கு கீழே சென்றது.

ஆனால், தற்போது, வடகிழக்கு பருவமழையின் அளவு குறைந்த போதிலும், முறையான மழைநீர் சேமிப்பின் காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. மாவட்டம் முழுவதும் பல்வேறு தடுப்பணைகள், சிமென்ட் கான்கிரீட் தடுப்பணைகள், நீர் உறிஞ்சி குழிகள், குட்டைகள், நீர்வரத்து கால்வாய்கள், பண்ணை குட்டைகள், அகழிகள், தனிநபர் வீடுகளில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள், புனரமைப்பு பணிகள், ஏரிகளில் மரம் நடுதல் போன்ற பணிகள் பணிகள் ₹87.86 கோடி மதிப்பில் செய்திருக்கிறோம். மேலும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1,555 பணிகள் ₹44.56 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டன. மேலும், கலெக்டர் அலுவலகத்தில் ‘நீர் வங்கி’ ஏற்படுத்தப்பட்டு 260 தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துடன் இணைந்து 672 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டன.

அதேபோல், 300 மேநீர் தேக்கத்தொட்டிகளில், தண்ணீர் வீணாவதை தடுக்க தானியங்கி முறை மூலம் மோட்டார் நிறுத்தும் வசதி செய்யப்பட்டது. விவசாயத்துக்கான நீர் தேவையை குறைத்து, மகசூலை அதிகரிக்கும் வகையில், நெல் மற்றும் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன வசதி செய்து கொடுத்திருக்கிறோம். மேலும், மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளின் புவியியல் அமைப்பை வரைபடமாக தயாரித்து, அதன் அடிப்படையில் மழைநீர் சேமிப்பு, நீராதார கட்டமைப்பு பணிகளை திட்டமிட்டிருக்கிறோம். எனவே, இந்த பணிகளை ஆய்வு செய்து, நீர் மேலாண்மைக்காக தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்காக மக்களிடம் இணையளத்தின் மூலம் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Kiruwannamalai District ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...