திட்டக்குடி, ஜன. 14: கடலூர் மாவட்டத்தில் நேற்று பொங்கல் பண்டிகையையொட்டி, பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும், கடைகள் மற்றும் வீதிகள் களைகட்டியது. திட்டக்குடியில் இயங்கும் சார்பு நீதிமன்ற வளாகத்தில் அனைத்து வழக்கறிஞர்களும் இணைந்து அனைவரும் எந்தவித சாதி, ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் வாழவேண்டும். அவர்களிடையே சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் திட்டக்குடி சார்பு நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடினர். சார்பு நீதிமன்ற நீதிபதி உமாராணி தலைமை தாங்கினார். இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் புதுப்பானையில் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கலிட்டு, கரும்பு மஞ்சளுடன் சூரியனுக்கு படையலிட்டு, கூட்டாக வழிப்பட்டனர். இவ்விழாவையொட்டி அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்ட இசை நாற்காலி போட்டி நடத்தபட்டது தொடர்ந்து கோலப்போட்டிகள், கயிறுஇழுக்கும் போட்டிகள், நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன கும்மி கோலாட்டம், தப்பாட்டம் உட்பட பல்வேறு போட்டிகளும் நடந்தன. விழாவில் அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி: பண்ருட்டி அரசினர் மேனிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் பூவராகமூர்த்தி தலைமையில் நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் அமலி, உடற்கல்வி இயக்குனர்கள் அரிகரன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியிலிருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பிளாஸ்டிக் மற்றும் டயர்களை கொளுத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை என்எஸ்எஸ் திட்ட அலுவலர் மோகன்குமார் செய்திருந்தார்.
நெல்லிக்குப்பத்தில் சமத்துவ பொங்கல்: நெல்லிக்குப்பம் காமராஜர் நகர் முஸ்லிம் மேட்டுத் தெருவில் மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் மத நல்லிணக்கத்தோடு மண்பானையில் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் அல்ஹாஜ் முகமது சையது, வெங்கடேசன், பஷீர் அகமது, அஷரப்அலி, மகளிர் குழு தலைவர்கள் சந்திரா, செல்வி, சுசிலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.