திண்டுக்கல், ஜன. 14: வத்தலக்குண்டு நடகோட்டையில் குறைந்த வாக்கு பெற்றவருக்கு துணை தலைவர் வெற்றியை அறிவித்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், நடகோட்டை ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 9 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தனலட்சுமி என்பவர் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்தார். தனலட்சுமிக்கு 9 வார்டு உறுப்பினர்களில் 6 பேர் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். அவரை எதிர்த்து போட்டியிட்ட கீதாவுக்கு 3 பேர் மட்டுமே வாக்களித்தனர். ஆனால் தேர்தல் நடத்திய அதிகாரி ரஞ்சிதா, வாக்குச்சீட்டுகளை மாற்றி கீதா வெற்றி பெற்றதாக அறிவித்ததாக தெரிகிறது.இந்நிலையில் தனலட்சுமி நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், ‘தேர்தல் அதிகாரியின் மோசடி காரணமாக துணை தலைவர் தேர்தலில் தோற்று விட்டேன். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நடந்த துணை தலைவர் தேர்தலை ரத்து செய்து விட்டு மீண்டும் துணை தலைவர் தேர்தலை நடத்த வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றம் செல்வேன்’ என கூறப்பட்டிருந்தது.