திண்டுக்கல்/ பழநி, ஜன. 14: திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கலை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதையொட்டி கல்லூரி மைதானத்தில் அழகான வண்ண கோலங்கள் போட்டப்பட்டன. தொடர்ந்து கரும்புகள் கட்டி 300க்கும் மேற்பட்ட பொங்கல் பானையில் சுமார் 2500 மாணவிகள் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்தனர். பின்னர் மாணவிகள் கும்மியடித்தும், ஆடிப்பாடியும் தமிழர் திருநாளான பொங்கலை வரவேற்று மகிழ்ந்தனர். இதில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். பழநி அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார். துறைத்தலைவர் (பொ) கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். விழாவில் முதுகலை மற்றும் இளங்கலையை சேர்ந்த மாணவ- மாணவிகள் பராம்பரிய உடைகளான வேட்டி- சட்டை மற்றும் சேலை அணிந்து பங்கேற்றனர். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் உள்ள விநாயகர் கோயில் முன்பு பொங்கல் வைத்தனர். பின்னர் மாணவ- மாணவிகளுக்கு பொங்கல், கரும்புகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.