×

போகி பண்டிகையின் போது காற்று மாசுபடாமல் பாதுகாத்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் கலெக்டர் தகவல்

திண்டுக்கல், ஜன. 14:  இன்று போகி பண்டிகையின் போது காற்று மாசுபடாமல் பாதுகாத்திட பொதுமக்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.ஆனால் தற்போது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான  பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்களை எரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் காற்று மாசு ஏற்பட்டு, இதன்மூலம் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்பும் ஏற்படுகிறது. குறிப்பாக வாகனஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.  மேலும், விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எனவே, புகையில்லா போகி கொண்டாடுவோம், சுற்றுச்சூழலை பேணிக்காப்போம், இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags : Poki Festival ,
× RELATED போகி பண்டிகையையொட்டி பூக்கள் விற்பனை விறுவிறுப்பு