×

கூடலூர் அருகே அரசு பள்ளியில் 25ம் ஆண்டு வெள்ளி விழா

கூடலூர், ஜன. 14:  மதுரை ஊராட்சிக்குட்பட்ட குங்கர்மூலை அரசு மேல்நிலைப் பள்ளியின் 25ம் ஆண்டு வெள்ளி விழா கடந்த 10ம் தேதி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற வெள்ளி விழா நிகழ்ச்சியில் ஆசிரியை யோகேஸ்வரி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி வெள்ளிவிழா நுழைவு வாயிலை திறந்து வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன் பள்ளியின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவிற்கான முத்திரையை (லோகோ) வெளியிட்டார். மாவட்ட கல்வி அலுவலர் பழனிச்சாமி உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வக மையத்தை திறந்து வைத்தார். முன்னதாக மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட பேரணி மண் வயல் பஜாரில் இருந்து தொடங்கி பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.இந்த பேரணியில் கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கம் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களும், விழாவில் கலந்து கொண்ட முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர் ரவிக்குமார், அப்புகுஞ்சன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அனந்தசயனன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் குஞ்சு முகமது மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆசிரியர் லைலாமோள் அமுல் நன்றி கூறினார்.

Tags : Government School ,Cuddalore ,
× RELATED ஒடுகத்தூர் அருகே பரபரப்பு அரசு...