×

கிராமங்களில் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உள்ளாட்சி நிர்வாகிகள் முன்வர வேண்டும்

அரியலூர், ஜன. 14: அரியலூர் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் நடத்திய கருத்தரங்கில் அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குற்ற நிகழ்வுகளை தடுக்க உதவ வேண்டுமென திருச்சி சரக காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிகளுடன் கலந்தாய்வு கருத்தரங்கம் நடந்தது. எஸ்பி சீனிவாசன் தலைமை வகித்தார். திருச்சி சரக காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம தலைவர்கள் அனைவரும் தங்களது கிராமத்தில் உள்ள பிரச்னைகள் குற்றம் நடைபெறுதற்கான சூழல்கள் குறித்து முன்கூட்டியே காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். அப்படி செய்தால் குற்ற சம்பவங்களை தடுக்க இயலும்.

அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை முடிந்த அளவுக்கு பொருத்த தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் குற்ற நிகழ்வுகளை தடுக்க முடியும். குற்றவாளிகளை அடையாளம் காணவும் முடியும். எனவே இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதுபோன்று அனைத்து கிராம தலைவர்களும் தங்களுடைய பகுதிகளில் விபத்துக்கள் நடைபெறாவண்ணம் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைவரும் ஹெல்மெட் அணிந்து செல்லவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற கிராம தலைவர்கள் ஹெல்மெட் அணியவும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட கிராம தலைவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம தலைவர்களை அழைத்து காவல்துறையினர் குற்ற நிகழ்வுகளையும், விபத்துக்களை குறைக்கவும் நடத்திய முதல் கலந்தாய்வு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : villages ,
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு