×

சென்னையில் ஒரே நாளில் வடமாநிலத்தை சேர்ந்த 2 குழந்தைகள் கடத்தல்: சிசிடிவி பதிவு மூலம் போலீசார் விசாரணை

சென்னை: சென்னையில் ஒரே நாளில் வடமாநிலத்தை சேர்ந்த 2 குழந்தைகள் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி பதிவு மூலம் ரயில்வே போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஜானி-ரந்தோஷ் தம்பதி, தங்களது 8 மாத ஆண் குழந்தையுடன் சென்னை மெரினா கடற்கரையில் தங்கி, பல்வேறு பகுதிகளில் பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் நேற்று முன்தினம் சுற்றித் திரிந்த ஒரு பெண், ‘‘உங்கள் குழந்தை மிகவும் அழகாக இருக்கிறது. சினிமா ஷூட்டிங் நடக்கிறது. அதில் நடிப்பதற்கு ஒரு குழந்தை தேவைப்படுகிறது. அதில் உங்கள் குழந்தையை நடிக்க வைக்கிறேன், பணம் தருகிறேன்,’’ என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

அதற்கு அவர்கள் சரி என்று கூறியதும், மெரினா கடற்கரையில் இருந்து அவர்களை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றதும், அவர்களிடம் நீங்கள் இங்ேக இருங்கள் குழந்தைக்கு முதலில் ஆடை மாற்ற வேண்டும். அதன்பிறகு ஸ்கின் டெஸ்ட் எடுக்க வேண்டும் எனக் கூறி ரந்தோஷ், அவரது மாமியாரை ஒரு இடத்தில் நிற்க வைத்து விட்டு, குழந்தையை தூக்கிக் கொண்டு மர்ம பெண் மருத்துவமனைக்கு உள்ளே செல்வது போல் நடித்து, குழந்தையுடன் மாயமானார்.

நீண்ட நேரமாகியும் அந்த பெண்ணை காணவில்லை. இதையடுத்து அவர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்ற பெண் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதையடுத்து அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் அந்த பெண்ணை தேடிவருகின்றனர். இதேப்போல், அசாம் மாநிலம், கௌகாத்தி, ராங்கியா மண்டல் பகுதியை சேர்ந்த அசார் அலி-மர்சினா தம்பதி தங்களது மகள்கள் மஷிதா (6), ரஷிதா (2) ஆகியோருடன் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களுடன் வேலை செய்து வந்த அமீது என்பவரும் வந்துள்ளார்.

இவர்களுக்கான ரயில் காலையில் என்பதால் நடைமேடை 10ல் குழந்தையை அருகில் உறங்க வைத்துவிட்டு அனைவரும் நன்றாக உறங்கியுள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் எழுந்து பார்த்த போது அருகில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை ரஷிதாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் ரயில்வே போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், ரயில்வே இன்ஸ்பெக்டர் தாமஸ் ஏசுதாசன் மற்றும் போலீசார் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவர்களுடன் வந்த அமீது என்பவர் நள்ளிரவு 1.15 மணியளவில் அனைவரும் நன்றாக தூங்கிய பிறகு குழந்தையைத் தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையைக் கடத்திச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.

Tags : children ,North-East ,Chennai ,CCTV ,Police investigation ,
× RELATED வட கிழக்கு டெல்லியில் கன்னையா குமார் போட்டி: காங். அறிவிப்பு