மேட்டூர், ஜன.13: மேட்டூர் மாசிலாபாளையத்தில் உள்ள ஜீவி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தனர். இந்திய பள்ளி கல்வி குழுமம் சார்பில், 65ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான உள்ளரங்கு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. உத்திரபிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழக அணி சார்பில் 61 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், மேட்டூர் மாசிலாபாளையத்தை சேர்ந்த ஜீவி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஓம்ஸ்ரீ விஷ்வா, கிரிஸ்வர் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். வெற்றிபெற்ற மாணவர்களை சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி, பள்ளி தாளாளர் அன்பழகன் ஆகியோர் பாராட்டினர்.