ஓமலூர், ஜன.13:ஓமலூர், காடையாம்பட்டி ஒன்றியங்களை, மீண்டும் அதிமுகவே தக்க வைத்துள்ளது. ஓமலூர் ஒன்றியத்தில் தலைவர், துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. ஓமலூர் ஒன்றியத்தில் அதிமுக 11, திமுக 9, பாமக 4, சுயேட்சை 2, தமாகா ஒரு இடங்களில் வெற்றி பெற்றனர். ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு அதிமுகவில் ராஜேந்திரன், திமுகவில் கோபால்சாமி போட்டியிட்டனர். இதில், அதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து ஓமலூர் ஒன்றியத்தை அதிமுக மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. துணை தலைவர் பதவிக்கு பாமகவை சேர்ந்த செல்வி ராமசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், காடையாம்பட்டி ஒன்றிய குழு தலைவராக, அதிமுகவை சேர்ந்த மாரியம்மாள் ரவியும், துணை தலைவராக மகேஸ்வரி வெங்கடேசும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.