×

மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் மட்டும் எருதாட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.13: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் மட்டும் எருதாட்டம் நடத்த வேண்டுமென ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகையினையொட்டி எருது விடும் விழா நடத்துவது வழக்கம். இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்து பேசியதாவது: பொங்கலை முன்னிட்டு அனுமதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் மட்டும் எருது விடும் விழாவை நடத்த வேண்டும். வேறு இடங்களில் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தினால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்றே எருது விடும் விழா நடத்த வேண்டும். அனுமதி பெறாமல் விழா நடத்த ஏற்பாடு செய்பவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். விழாவை நடத்த வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவத்துறை மற்றும் தீயணைப்பு துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளை கொண்டு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். மேலும், இக்குழுவில்  எருதுவிடும் விழாவை மேற்பார்வையிட தேர்ந்த விவசாய நிபுணர்கள், அரசு சாராத சமூக சேவகர்கள், கொடையாளர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் ஆகியோர் நடுநிலை தணிக்கை குழுவில் இடம் பெறுவார்கள்.

நிகழ்ச்சியில், பங்கு பெறும் காளைகளுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தக் கூடாது. மேலும், அவை போதிய பாதுகாப்புடன் உள்ளதா என உறுதி செய்ய வேண்டும். எருது விடும் விழா நடத்தப்படும் இடத்தில் மரத்தால் ஆன 2 அடுக்கு தடுப்பு அரண் அமைக்க வேண்டும். இதை பொதுப்பணித்துறை தணிக்கை செய்து சான்று பெற வேண்டும். காளைகளுக்கு ஊக்க மருந்துகள் கொடுக்கப்படுகிறதா என பரிசோதித்து சான்று அளிக்க வேண்டும். மேலும், காளைகளுக்கு தொற்று நோய் இல்லை என கால்நடை பராமரிப்பு துறை சான்று அளிக்க வேண்டும். மேலும், மருத்துவ சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவ குழு, ஆம்புலன்ஸ் வசதி செய்திருக்க வேண்டும். குடிநீர் வசதி, சுகாதார வசதிகள் செய்ய வேண்டும். காவல் துறையினர் விழா நிகழ்ச்சிகளை முழுவதையும் கேமராவில் பதிவு செய்ய வேண்டும். தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். எருது விடும் விழாவை நமது மாவட்டத்தில் அமைதியாக நடத்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் டிஆர்ஓ சாந்தி, எஸ்.பி பண்டிகங்காதர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராமமூர்த்தி, ஆர்டிஓ தெய்வநாயகி, குமரேசன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர். மனோகரன், துணை இயக்குனர் டாக்டர். இளங்கோவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Burial ,villages ,district ,
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு