×

இணையதளம் வழியாக பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு குறித்து பயிற்சி

தர்மபுரி, ஜன.13: தர்மபுரியில், இணையதளம் வழியாக நாட்டமறி தேர்வு நடத்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக அரசு பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து மேம்படுத்த, பள்ளிகள் அளவில் ‘நாட்டமறித் தேர்வு’ நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள், ஒருங்கிணைந்தக் கல்வி மாநில திட்ட அலுவலகத்தால் அளிக்கப்பட்டு அதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு படிக்கும் 8 லட்சத்து 51 ஆயிரத்து 999 மாணவர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியில் கணினி வழியில் நாட்டமறித் தேர்வு நடத்தப்பட உள்ளது.

 இதற்கான மாதிரி வினாத்தாள்கள், தமிழ்நாடு ஆசிரியர் வலைதளத்தில் (டிஎன்டிபி) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிலுள்ள 90 வினாக்களுக்கு 90 நிமிடங்களில் பதில் அளிக்கும்படி மாணவர்களுக்கு இணையதள பயிற்சி அளிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 36 ஆயிரம் மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர். ஜனவரி 4வது வாரத்தில் 10ம் வகுப்புக்கும், பிப்ரவரி மாதத்தில் 9ம் வகுப்புக்கும் நாட்டமறி தேர்வு இணையதளம் வழியாக நடத்தப்படும். இதற்காக குறுவளமைய ஒருங்கிணைப்பாளர்கள், கணினி ஆசிரியர்கள், ஆசிரியப்பயிற்றுநர்கள் அடங்கிய குழுவினருக்கு, தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்ட அரங்கில் பயிற்சி நடந்தது.

இதில் தர்மபுரி முதன்மைக் கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், ‘மாணவர்கள் தங்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில், தலைமை ஆசிரியர்கள் இணையதள வசதியுடன் கணினிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்வை கண்காணிக்க பள்ளி ஆசிரியர்களை நியமித்தல் வேண்டும். தேர்வை நல்ல முறையில் நடத்த வேண்டும்,’ என்றார். நிகழ்ச்சியில், தர்மபுரி, அரூர் கல்வி மாவட்ட அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், பொன்முடி, டயட் முதல்வர் ஹேமலதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.  பின்னர், ஆசிரியர்களுக்கு மடிகணினி மூலம் நேரடி பயிற்சியும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன், மாவட்ட தேர்வு அமைப்பாளர் சிங்காரவேலன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜூ, ராஜகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : school teachers ,
× RELATED தொலை தூரத்தில் தேர்தல் பணி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு