×

கும்மிடிப்பூண்டி மார்க்கெட்டில் வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி தடுத்த போலீஸ்காரருக்கும் வெட்டு: 6 பேர் கும்பலுக்கு வலை

கும்மிடிப்பூண்டி, ஜன. 13: கும்மிடிப்பூண்டி மார்க்கெட்டில் போலீஸ்காரர், வாலிபரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி, கள்ளுக்கடை மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (29). அங்கு உள்ள பூக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர், பஜார் பகுதியில் நேற்று காலை 9 மணியளவில்  நின்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென அங்கு ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ராஜேஷை சுற்றி வளைத்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பியோடினார்.

ஆனால், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பின்தொடர்து துரத்தி சென்று ராஜேஷை மறித்து கத்தியால் வெட்டினர். இதில் வயிற்றில் காயமடைந்த அவர், உயிர்பிழைக்க அவர்களிடம் இருந்து மீண்டும் தப்பித்து ஓடினார். இந்த கொலை முயற்சி காட்சிகளை கண்ட பொதுமக்கள், பதற்றத்தில் நான்கு புறமும் சிதறி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீஸ்காரர் ரஞ்சித் சம்பவ இடத்துக்கு விரைந்து  சென்றார். கும்பலிடம் சிக்கியிருந்த ராஜேஷை மீட்க முயன்றார். அப்போது, அவரையும் அந்த கும்பல் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில் காயம் அடைந்த போலீஸ்காரர் ரஞ்சித் மற்றும் ராஜேஷ் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  சிகிச்சை பெற்று இருவரும் வீடு திரும்பினர்.

இதுபற்றி கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பஜார் பகுதி மற்றும் சுற்றி இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதில், தாமரை ஏரிக்குளம் பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவருக்கும், வெட்டுப்பட்ட ராஜேஷ்க்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் அவரை வெட்டி கொல்ல அந்த கும்பல் முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து முனுசாமி உள்பட 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : policeman ,
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...