காளையார்கோவில், ஜன.13: இந்த ஆண்டு 6 கிரகணங்கள் நடைபெற உள்ளன என்று அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் தெரிவித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக காளையார்கோவில் காளீஸ்வரா கோவில் முன்பாக சந்திரகிரகண நிகழ்வை கண்டுகளிக்க தொலைநோக்கி மூலமாக பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல் பெரும் திரளான மக்கள் சந்திரகிரகண நிகழ்வை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர். கிளைத்தலைவர் வீரபாண்டி, பொருளாளர் நாகராஜன், தொலைநோக்கி பயிற்சியாளர்கள் முத்துக்குமார்,சசிக்குமார் மற்றும் சுந்தர், ஜெயமுருகன் ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி கூறுகையில், ‘‘புத்தாண்டு 2020 பிறந்ததுமே வானியல் கோலாகலம் துவங்கிவிட்டது. இந்த ஆண்டு மொத்தம் 6 கிரகணங்கள் நடைபெற உள்ளன. அதில் 4 கிரகணங்கள் இந்தியாவில் தெரியும். அதில் முதல் கிரகணம் இது. சூரிய கிரகணம் முடிந்த அடுத்த 15 நாளில் சந்திர கிரகணம் வரும். இது சூரிய சந்திர கிரகணங்களின் இயல்பு. நாசா இந்த சந்திர கிரகணத்துக்கு கொடுத்துள்ள பெயர் ஓநாய் சந்திர கிரகணம் என்று தெரிவித்தார்.