×

இணைப்பு குழாய் உடைந்து வீணாக வழிந்தோடிய குடிநீர்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்


திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு திருவொற்றியூர் குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில், குழாய்கள் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக, புழல் ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் திருவொற்றியூருக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு, மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கரிமேடு தெரு அருகே பேசின் சாலை மற்றும் மணலி சாலை சந்திப்பில் இந்த குடிநீர் இணைப்பு குழாயில் பழுது ஏற்பட்டு கடந்த  சில தினங்களாக குடிநீர் கசிந்துள்ளது. இதை குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதன்காரணமாக, நேற்று அதிகாலை பழுதடைந்த குடிநீர் இணைப்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் பீய்ச்சி அடித்து வெளியேறி சாலையோரம் உள்ள முட்புதரில் குளம்போல் தேங்கியது.  

பின்னர் பிற்பகல் சுமார் ஒரு மணிக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிக்கு இதுபற்றி தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த குடிநீர் குழாய் பழுதுபார்ப்பு பிரிவு ஊழியர்கள், குழாய் உடைப்பை சரி செய்தனர். குடிநீர் வெளியேறியது குறித்து அதிகாரிகளுக்கு தாமதமாக தெரிந்ததால்  பொதுமக்களுக்கு பயன்பட வேண்டிய பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணானது.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...