ஈரோடு, ஜன. 13: பொங்கல் பண்டிகையொட்டி 2வது ஆண்டாக ஈரோட்டில் வரும் 18ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதற்காக வாடிவாசல் தயார் நிலையில் உள்ளது.பொங்கல் பண்டிகையொட்டி ஈரோடு ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் 2வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டிகள் பெருந்துறை ரோட்டில் உள்ள ஏ.இ.டி பள்ளி மைதானத்தில் வரும் 18ம் தேதி நடக்கவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டில் கடந்த ஆண்டு 190 காளைகள் கலந்து கொண்டது. இந்த ஆண்டு 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு காளைகள் வெளியே வரும் வாடிவாசல், காளைகள் சீறி பாயும் இடம், ஜல்லிக்கட்டை மக்கள் பார்க்கும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைத்தல் போன்ற பணிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி காங்கயம் இன காளைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், காளைகளை வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையிலும் நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டியின்போது வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் ஆம்புலன்ஸ் வசதிகளும், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் இருக்கும். மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்வதற்காக பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.