×

ஜல்லிக்கட்டில் உயிர் இழப்புகளை தடுக்க பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை

கோவை, ஜன.13: ஜல்லிக்கட்டில் உயிர் இழப்புகள், காயங்கள் ஏற்படுவதை தடுக்க பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பிசியோதெரபி மருத்துவ சங்கத்தினர் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கத்தின் பொது செயலாளர் டாக்டர் ராஜேஸ் கண்ணா கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளின் பாதுகாப்பிற்காக கால்நடை துறை சார்பாக காளையின் உடல்நிலை மற்றும் வயது ஆகியவை கருத்தில் கொள்ளபட்டு பரிசோதனைகள் மற்றும் சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி ஆய்வு, உயிர்காக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. மாடுபிடி வீரர்களுக்கு பிசியோதெரபி மருத்துவர்கள் பரிந்துரையோடு உயிர் காக்கும் கவசங்களான வயிற்று கவசம், நெஞ்சு கவசம், சீறுநீரக கவசம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

இதன் மூலம் உயிர் இழப்பை தடுக்க முடியும். அதேபோல் எலும்பு முறிவு மற்றும் மூட்டு விலகாமல் இருக்க முழங்கால் மற்றும் முழங்கை, கணுக்காலை பாதுகாக்க பாதுகாப்பு பட்டைகளை வழங்க வேண்டும். போட்டி ஆரம்பிக்கும் முன்னர் பிற விளையாட்டு போட்டிகளை போல மாடுபிடி வீரர்களின் உடற்தகுதியை பிசியோதெரபி மருத்துவரின் பரிசோதனை மூலம் உறுதி செய்ய வேண்டும். மாடுபிடி வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவை நியமிக்க வேண்டும். இதில் பிற விளையாட்டு போட்டிகளை போலவே பொது மருத்துவர் மற்றும் விளையாட்டு துறை சார்ந்த பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மாடுபிடி வீரர்களின் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பிசியோதெரபி மருத்துவர்கள் தலைமையில் பயிற்சி முகாம்களை நடத்த தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால், உயிர் இழப்பு மற்றும் காயங்கள் ஏற்படாமல் தடுக்கலாம். இந்த வழிமுறைகளை பின்பற்ற 2009ம் ஆண்டு கொண்டு வரபட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்கு முறை சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவருவதன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக நடைமுறை படுத்த முடியும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : physiotherapy doctors ,
× RELATED ஜல்லிக்கட்டில் பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை