ஈரோடு, ஜன. 13: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகத்தில் காலியாக உள்ள 969 உதவி ஆய்வாளர் (சப்.இன்ஸ்பெக்டர்) பணியிடத்திற்கான எழுத்து தேர்வில் பொது பிரிவினருக்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் திண்டல் வேளாளர் கல்லூரியில் நேற்று காலை 2,097 எழுதினர். இத்தேர்வுக்கு 2,861 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 764 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வர்கள் தேர்வு வளாகத்திற்குள் காலை 8 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறைக்குள் செல்போன், பேக், கால்குலேட்டர், புளுடூத் இதர எலக்ட்ரானிக் பொருட்கள், விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் 2 டி.எஸ்.பி, 8 இன்ஸ்பெக்டர்கள், 29 எஸ்.ஐ உட்பட 232 பேர் தேர்வு பணியிலும், பாதுகாப்பு பணியில் 200 போலீசாரும் ஈடுபட்டிருந்தனர். இன்று 13ம் தேதி நடைபெற உள்ள போலீசாருக்கான எஸ்.ஐ எழுத்து தேர்வில் 274 பேர் எழுத உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.